Friday, December 25, 2009

கிறித்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்!!

அனைவருக்கும் குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

Monday, December 21, 2009

கிறிஸ்து பிறப்பிற்கான முன் தயாரிப்புகள்

நமக்காக, நம்மை மீட்க ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதனை நாம் நினைவு கூற, நம் மீட்பரின் கருத்துக்களை நடை முறைப்படுத்த நம்மை, சாந்தி நகர் பங்கு மக்களை தயார்படுத்த, குழந்தை இயேசு இளையோர் இயக்கம் இம் மார்கழித் திங்கள் ஆரம்பம் முதலே சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் வியாழக்கிழமை முதல் சாந்தி நகர் பங்கு குடும்பத்தினர்க்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் வாழ்த்துக்களை தேரிவித்து வருகின்றது.



ஆலயத்தில் ஸ்டார் அமைக்கும் பணியில் இளையோர்


கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணியில் இளையோர்










Saturday, November 21, 2009

ஊடகங்களின் வளர்ச்சி - இளையோர் வாழ்வில் எழுச்சியா? தளர்ச்சியா?

சமுதாயத்தின் வளர்ச்சி என்பது இன்றைய காலக்கட்டத்தில் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியை சார்ந்ததாகவோ அல்லது அதனை மையமாக வைத்தோ தான் இருக்கின்றது. தொடர்புச்சாதனங்கள் தான் பல வித புதுத்தொழில்நுட்பங்களுக்கும், புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் அடி நாதமாக விளங்குகின்றது. தந்தியில் ஆரம்பித்து, தொலைபேசி, அலைபேசி, ப்ளூடூத், சென்சார் என இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் செயற்கைக்கோள், டிவி, ரேடார், ரோபோ, இராணுவம், சினிமா, இணையம் என மனிதனின் பொழுதுபோக்கு, ஆடம்பர பொருட்கள் அமைந்துள்ளது.

ஒரு காலக்கட்டத்தில் புறா, நம்பிக்கைகுரிய நபர்கள் என ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உறுதியாக சென்றடைந்து விடும் என்ற உறுதித்தன்மையில்லாமல் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால் இன்று அடுத்த நொடியே நம் விருப்பங்களையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்த, அறிந்துகொள்ள நவீன தொழில் நுட்பங்கள் உதவுகிறது.

இப்படி ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ குறித்த தகவல்கள், வாழ்க்கைமுறைகள் படிப்படியாக ஏனைய நபராலோ, சமுதாயத்தாலோ பின்பற்றப்பட்டு தமது வாழ்வில் புதியதோர் பார்வையை கொண்டுவர ஊடகங்கள் துணைபுரிந்தன. முந்தைய காலகட்டங்களில் வளர்ச்சி என்பது நாகரீகம், பண்பாடு, குடும்ப அமைப்பு, வாழ்வியல் சூழல் என்ற பார்வையிலே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வளர்ச்சியை எண்களால் நிர்ணயிக்கும் ஒரு மாய உலகிற்கு வந்திருக்கின்றோம்.

வளர்ச்சியை பொருளாதாரத்தால் பார்க்கும் கண்ணோட்டத்தை கொடுத்தது யார்? ஊடகங்கள். ஆம்! ஊடகங்கள் ஒரு மனிதனை மேன்மைப்படுத்தவதையோ, சிறுமைப்படுத்துவதையோ சாத்தியப்படுத்துகின்றன. ஊடகங்கள் பெரும்பாலும் ஒர் சார்புத்தன்மையாகவோ அல்லது வியாபார நோக்கோடுதான் செயல்படுகின்றன. பொது நல நோக்கோடு செயல்படும் ஊடகங்களின் எண்ணிக்கையை மொத்த ஊடகங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது வருத்தமே மிஞ்சும்.

இத்தகைய தொழில்நுட்பங்களை, ஊடகங்களை அதன் அபரிவிதமான வளர்ச்சியை பலரால் சரிவர புரிந்துகொள்ளவோ அல்லது சரிவர பயன்படுத்தவோ தெரியவில்லை. எதற்காக இந்த தொழில் நுட்பம்? எதற்காக இந்த ஊடகம்? இதனை எங்கனம் உபயோகப்படுத்தினால் நம் வாழ்வு சிறக்கும்? என்ற கோணத்தில் புரிந்துகொள்ளாமல், தனது மனதின் சிற்றின்ப ஆசைகளுக்கு அடிபணிந்து அதன் உபயோகத்தன்மையையே சிதைக்கும் ஒரு சூழல் தான் இளையோரிடம் உள்ளது.

தொலைக்காட்சி - இன்றைக்கு இந்தியாவிலே 417 அலைவரிசைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதிலே செய்திச் சானல்கள் 70 மற்றும் உபயோகமான சானல்கள் ஏறத்தாழ 54. இது 12 விழுக்காடாகும்.
ரேடியோ - ஒரு சில சமுதாய வானொலிகளைத் தவிர ஏறக்குறைய 70 சதவிகிதத்திற்குமேல் சினிமாச் செய்திகளைத்தான் வெளியிடுகின்றன.
இதழ்கள் - இவையும் பெரும்பாலும் சினிமா, பகையுணர்வை வளர்ப்பதிலே தான் ஆர்வமாக இருக்கின்றன.

இத்தகைய ஊடகங்களை நாம் கண்ணோக்கும் பார்வை தவறா? அல்லது அவசியமில்லா அனாவசியமானவற்றை வெளியிடும் ஊடகங்கள் தவறா? என்று கேட்போமானால் இருவர் கரங்களும் மற்றொருவரையே காட்டும்.
ஒழுங்காக ஆடிப்பாடி, ஓடி விளையாடிக்கொண்டிருந்த இளையோர் இன்று ஓட்டமின்றி தொலைக்காட்சியில் வரும் ஆட்டத்தை மட்டும் பார்த்து வயிறு வளர்க்கின்றனர். விளையாடும் ஆர்வமும், உடல் திறனும் வலுவிலக்க யார் காரணம்? வீணான நேரத்தை போக்க வந்த ஊடகங்கள் இன்று இளையோரின் நேரத்தை வீணாக்குவதில் முதலிடம் வகுப்பது எதனால்? நம்மில் பலர் கேட்கலாம் சரியானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாமே என்று!

சுவையான உணவு, சுவையில்லா ஆரோக்கிய உணவு இரண்டையும் நம் முன் வைத்தால், பலரது விருப்பம் சுவையான உணவாகத்தான் இருக்கும். ஏனெனில் நம் உடல்தான் ஆரோக்கியமாக இருக்கிறதே! என்ற எண்ணம் நம் மனதில் மேலோங்கி அதன் பேரில் விருப்பம் கொள்ள வைக்கின்றது. ஊடகங்களில் நல்ல விடயங்களும் இருக்கிறதே! என்போமானால் அது இதனைப்போலத்தான் இருக்கும்.

கற்றுக்கொள்ள ஆர்வமிருக்கும் இளையோரும் மாறுபட்ட தகவல்கள் மற்றும் வியாபார நோக்கங்களோடு வெளியிடும் ஊடகங்களால் ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர். எது சரி? என்று தேர்ந்தெடுப்பதில் ஆரம்பிக்கும் குழப்பம், சோம்பேறித்தனம், உழைப்பின்மை, சோர்வு என யாவும் சேர்ந்து இறுதியில் திறனற்றவனாக மாற்றிவிடுகின்றது. இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் தனது மகன்/மகள் கணிணியில் அதிக நேரத்தை செலவழிக்கிறான்/ள், தொலைக்காட்சியில் அதிக நேரத்தை வீணாக்குகின்றான்/ள் என புலம்புவதை நம்மில் அனைவரும் உணர்ந்திருப்போம்.

ஊடகங்கள் இல்லாக் காலத்தில் இதனை விட மாண்போடு இளைஞன் இருந்தான். நாட்டிற்காக உழக்கவேண்டும், வீரத்தை நிலை நாட்ட வேண்டும், கண்டங்கள் கடந்து வியாபாரம் செய்யவேண்டும் , நல்லதோர் குடிமகனாக இருக்கவேண்டும் என எண்ணினான். இன்றும் இளையோரிடம் அச்சிந்தனை இருக்கின்றது, ஆனால் அது சுய நலம் எனும் சாயம் போர்த்தி இருக்கின்றது. இத்தகைய நிலைக்கு இளையோரை கொண்டுவந்தததில் ஊடகங்கள் தான் முன்னிலை வகிக்கின்றது.

Sunday, September 13, 2009

புதிய உறுப்பினர்கள் இணைப்பு


                இளையோர் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைப்பது குறித்து இன்று நடந்த கலந்தாய்வில் முடிவெடுக்கப்பட்டது. எண்ணற்ற இளையோர் உள்ள பங்கு குடும்பத்தில், குறைவான அளவில் உறுப்பினர்கள் உள்ளது மனக்குறையே. உறுப்பினர்கள் அதிகரிக்கும்போது செயல்பாடுகள் அதிகமாகும். அதனோடு கூட புதிய எண்ணங்களும், புதிய செயல் திட்டங்களுக்கு கிடைக்கும்.
  

தற்போதைய செயல்பாடுகள்
  • ஆலயப்பணிகள்
  • இரத்த தானம்
  • விடுமுறை வேதாகமப் பள்ளி (VPS)
  • கிறிஸ்துமஸ் கேரல்ஸ்
  • கிறிஸ்துமஸ் ட் ரீ (குலுக்கல் முறையில் பரிசு வழங்குதல்)
  • சிறைச்சாலை சந்திப்பு
  • மருத்துவமனை சந்திப்பு
  • ஏழ சிறுவர்களுக்கு கல்வி கற்க உதவி
  • ஏழை திருமணத்திற்கு இயன்ற உதவிகள் செய்தல்
  • பங்கு கிளைப் பங்குகளில் நற்செய்திப் பணி
  • கிளைப் பங்குகளில்  சிலுவைப் பாதை
  • ஞாயிறு மறைக்கல்வி

        தொடர்ந்து எமது பணிகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு பங்கு குடும்பத்தில் உள்ள  இளைஞர், இளம்பெண்கள் இளையோர் இயக்கத்தில் இணைந்து செயல்பட உற்சாகப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. புதிய உறுப்பினராக சேருவதற்கு விருப்பமுள்ள 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

Sunday, August 23, 2009

வாழ்த்துவோம் !!!

இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஒன்று இனிதே நடந்தேறியுள்ளது. ஆம் அகில உலக கிறிஸ்தவ அமைப்பு (IYCS), அகில உலக கத்தோலிக்க அமைப்பு(ICO) மற்றும் அகில உலக அரசு சாரா அமைப்பு(NGO) ஆகியவற்றின் புதிய ஒருங்கிணைப்பாளராக சென்னை - மயிலை உயர் மறை மாவட்டத்தின் ஆர். . புரம் பங்கின் ஒருங்கிணைப்பாளர் தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். நமது தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இத்தகைய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விஷயமாகும்.

அவரை நமது இளைஞர் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். பல்வேறு நாடுகளின் இளைஞர் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் அவரோடு இணைந்து, அவர் கருத்துக்களை அறிந்து செயலாற்ற நாமும் விழைவோம்.

நன்றி:
நம் வாழ்வு
23 -08 -2009

Tuesday, July 14, 2009

இளைஞனே! இருத்தலா? இயக்கமா?

நண்பா! ...
ஒரு நிமிடம்.....
இளைஞனே ! இருத்தலா? இயக்கமா? என்ன என்பதும் உன்னைப் பொறுத்ததே. இருத்தலில் இருக்கும் எந்தவொரு பொருளும் இயங்கவில்லை என்றால் வாழ்வு என்பது  சாத்தியமாகாது! அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் கூட ஓர் இடம் விட்டு மற்றொரு இடம் மாறினால் மட்டுமே மனிதர்களுக்கு பயன்படும். இல்லையேல் சங்கடமாகிவிடும். இருத்தலும் இயக்கமும் நம்முடைய எண்ணத்தின் வெளிப்பாட்டிலிருந்தே உதயமாகின்றது.

இளைஞனே! உன் எண்ணத்தை தூயதாக்கு!
இலக்கை கூர்மையாக்கு!
நடையை விரைவாக்கு!
சொல்லை  செயலாக்கு!
வாடி விடும் மலர் கூட இதழ் விரித்து சிரிக்கின்றது!
வாழ்ப்பிறந்த உனக்கேன் அழுகை பிறக்கிறது?
இமைகளை பூட்டி விழிகளை சிறை வைக்காதே
பூட்டை உடைத்தெறி! நம்பிக்கை ஒளிக்கீற்று 
உன் நரம்பெல்லாம் ஊடுருவட்டும்.
மூட்டப்பூச்சிக் கூட முடங்கி இருப்பதில்லை
மூளை கொண்ட மனிதனே......... இன்னுமா அச்சம்?
நீ சும்மா இருந்தால் சுகமே உன் சுமையாகும்
 இன்று வந்த காற்று நிரந்தரமல்ல. நாளை
வரும் என்று உறுதி இல்லை - எனவே
இன்று வரும் தென்றலில் அசைந்தாடு
நாளைய சூறாவளியில் எதிர்நீச்சல் போடு 
விரைவாக உன் சிறகை விரி! வானில் தடையேதுமில்லை!
இனி உன் முயற்சிக்கு வானம் தான் எல்லை!
தூங்கிய தூக்கம் போதும்; தூக்கத்தை தூக்கி எரிந்து புறப்படு!
தூங்கும் உன் சுற்றத்தாரை நீ தூண்டிஎழுப்ப  புறப்படு!
உனக்குள்ளே உனக்குள்ளே ஓராயிரம் ஒழி கீற்றுகள்
உள்ளடக்கி உள்ளதென உணர்ந்து நீ புறப்படு! உன்
இருவிழிப் பார்வைகளின் இமைகளை நீ திறந்து பார்
இருளானது நின் விழியைக் கண்டதும் மறைந்துவிடும்
சிந்தித்துப்பார்......................
குடிசையில் வாழ்ந்தவர் தான் - முன்னாள் குடியரசு தலைவர்
குடிமகனே முயன்றால் - நீ நாளைய குடியரசு தலைவர்...
அழுது பிறந்தாய் இறந்தாலும் அழுவார்!
நண்பா - முதலும் முடிவும் அழுகை மட்டும்தான் மிச்சம் என்பதை
புரிந்துகொள்!
 
நண்பா! 
எழு விழித்திடு இலக்கு அடையும் வரை நிற்காதே!
வாழ்வின் ஓட்டத்தில் தடைகள் வந்தாலும் தகர்த்தெறி!
மீண்டும் எழுந்து ஒழி வீச - வாழ - வளர வாழ்த்துரை ஏற்க - 
வரலாறு படைக்க வீறு கொண்டெழு!
என்னத்தை படைப்பாக்க!
சமுதாயத்தைச் செம்மையாக்க!
மனிதத்தை வளமாக்க வாராய்!
இளைஞனே......... 

ஆக்கம்: திருமதி. அருள்சீலி அந்தோணி 
நன்றி: www.anbinmadal.org

Sunday, April 12, 2009

அகவிருள் அகற்ற அருளொளி பிறந்தது

உயிர்ப்பு இந்த வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது. "காலங்கள் யாவும் அவருடையன" என்ற திரு வாக்கிற்கேற்ப கடந்து வந்த துன்ப காலங்களை நீக்கி உண்மையான, மகிழ்வான வாழ்விற்கு நம்மை அழைத்துச்செல்லும் உயிருள்ள உணவாக நமக்காக தன் இன்னுயிரையே ஈந்து உயிர்த்தார்.

தவக்கால நிகழ்வுகள்:


1. புனித வியாழன் 2&3. இரத்ததான முகாம் - புனித வெள்ளி


4. உயிர்ப்பின் தயாரிப்பில்

Sunday, March 15, 2009

தியானம்

இளையோருக்கான தியானம் இன்று இனிதே நடைபெற்றது. எதிர் பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்துகொண்டனர். "தவறுகளிலிருந்து மீள்தல்" என்ற அருமையானதொரு கருத்தை கொண்டு தியானம் நடைபெற்றது. பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் தவறு செய்தவன் திருந்துவது என்பதே ஆச்சரியமானதாக இருக்கிறது. ஏனெனில் தவறுகளை சுட்டி காட்டி, நல் வழிப்படுத்த சரியான வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்காததும், அல்லது சரியான நபர்கள் இருந்தும் உண்மை நிலை உணராமல் அலட்சியப்படுத்துவதுமாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இப்படிப்பட்ட வாழ்வியல் சூழலில் நம்மை புதிப்பித்துக்கொள்ள இந்த தியானம் நிச்சயம் உதவும் என்பது உறுதியே. இது போன்ற தியானங்களில் கட்டாயம் இளையோர் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் எனில் ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நம்மை அந்த வேலையில் புதுப்பித்துக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவும் பயிற்சிக்குட்படுத்துகின்றனர்.

ஆனால் நாம் நமது சமூக மற்றும் ஆன்மீக வாழ்வில் நம்மை மேம்படுத்த எங்ஙனம் நம்மை பயிற்சிக்கு உட்படுத்துகின்றோம் என்று பார்த்தோமானால் கேள்விக்குறியே மிஞ்சும். அதனால் தான் நமது ஆன்மீக அமைப்பானது மாதமொருமுறை தியானம் மற்றும் சபை சார்ந்த செயல்பாடுகள் என ஆன்மீகத்தோடு சமூக வாழ்வின் முன்னேற்றத்துக்கும் அடித்தளம் அமைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட செயல்பாடுகளுக்குள் நம்மை உட்படுத்த நாம் தாமாகவே முன் வரவேண்டும், அதனோடு கூட பெற்றோரும் இது போன்ற தியானங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளில் கலந்துகொள்ள தங்களது குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால்தான் எதிர்காலத்தில் மன்னிக்கும் மனப்பான்மையும், அன்பும், சகோதரத்துவமும் கொண்ட உண்மையான வாழ்வு வாழ முடியும்.

Wednesday, February 25, 2009

தவக்காலம்

தவம் என்றாலே ஒறுத்தல், ஒறுத்தல் என்பது தேவைக்கு அதிகமாக உள்ளதை பிறர்க்கு பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தியாவசியமில்லாததை தவிர்த்தல். இப்படிப்பட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தும் ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். இன்றைய சுயநலமிக்க அவசரமிகு உலகில் தனது தேவைகளுக்காகவும், வாழ்வுக்காகவும் அலைந்து கொண்டிருக்கின்றோம்.

"மண்ணாகப் பிறந்த நீ
மண்ணுக்கே திரும்புவாய்"

என்ற அருமையான பாடல் வரிகள் வாழ்வின் உண்மையை அப்பட்டமாக உணர்த்துகின்றது. நன்கு வளமிக்க மண்ணில் வளரும் பயிர்கள் செழிப்பான அறுவடையை கொடுக்கும். ஆனால் வளமில்லாத மண்ணோ ஒன்றுக்கும் உதவாது. அதனை மேம்படுத்த அதில் உரங்களை போட்டு உழுது பண்படுத்த வேண்டும். ஆம் நமது துன்பங்களை நீக்கும் வழிகளையும், நம்மை மனித நேயமிக்க மனிதனாக மாற்றவும், நம்மை புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்புகள் தேவைப்படுகின்றது. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் காலமாக இந்த தவக்காலம் அமைகின்றது.

இளைஞர்களாகிய நாமும் நம்மால் இயன்ற நற் காரியங்களையும், நமது வாழ்வு இறைவனின் பாதையில் செல்கின்றதா? என்பதனையும் பரிசீலனைக்கு உட்படுத்த இது தான் சரியான வேளை.

Monday, February 9, 2009

திருத்தந்தையின் மனக்கவலை

கடந்த பல மாதங்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியின் வாயிலாகவும் கேட்டும், உணர்ந்தும் மனக்கவலைப்பட்ட நிகழ்வு ஒன்று உண்டென்றால்; அது ஈழத்தமிழர்களின் வாழ்க்கைச்சூழல் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. இலங்கையில் பாதிக்கப்படுபவர்களை சக தமிழன் என்று நாம் எண்ணி கவலை கொண்டாலும்; பிறருக்கும், இந்த உலகுக்கும் அவர்களை மனித குலத்தைச் சார்ந்த ஒரு கூட்டம் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து கவலை கொண்டு, பாதிக்கப்படுபவர்களுக்கு பாரபட்ச்சமின்றி உதவ கட்டாய கடமை உள்ளது.

"ஒருவன் தன் மொழி சார்ந்து, தனது பாரம்பரியத்தோடு வாழும்போதுதான் மனித வாழ்வு மேன்மையடைகிறது." என்ற கருத்தில் தான்; தமிழ்த் தொண்டாற்றி இறை அருள் பெற்றுத்தந்து மனிதருள் புனிதரானார் புனித வீரமாமுனிவர். அத்தகையதொரு கலாசாரத்தின் பிரதிபலிப்போடு ஆண்டவர் இயேசு கிறித்துவின் அருளைப்பெற்று வரும் நமக்கு, அவர்களின் துன்பங்களையும், துயரங்களையும் அது மனம் உணர்ந்து கொள்வதில் வியப்பேதுமில்லை.

ஈழத்தில் பாதிக்கப்படும் மக்கள் குறித்து பல மாதங்களாக தனது கவலைகளை தெரிவித்து அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடி வரும் திருத்தந்தை அவர்கள், கடந்த வாரத்தில் இலங்கையில் பாதிக்கப்படும் மக்களின் நிலை அறிந்து கொள்ள வத்திக்கான் தூதுவர் அதி.வண.மரியா செனாரி ஆண்டகை அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கே வாடும் தமிழர்களுக்காக நமது கத்தோலிக்க கிறித்தவர்கள் 08/02/09 ஞாயிறு அன்று தமிழகமெங்கும் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தி தமது சமூக அக்கறையையும், மனக் குமுறலையும் வெளிப்படுத்தினர்.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மயிலை மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

இராணுவம் தமிழ் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு பகுதிகளிலும், மருத்துவமனை, தேவாலயம் ஆகியவற்றின் மீதும் குண்டுகள் வீசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறியும் அரச தலைவர் ராஜபக்சவும் மற்றவர்களும் கேட்கவில்லை.

சிறு குழந்தைகள், பெண்கள், வியாதி வந்தவர்கள் என நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்.

தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்பதை ஒரு சாக்காக வைத்து தமிழ் மக்களை அழிக்க நினைக்கின்றனர். அங்கு தமிழ் மக்கள் உரிமையோடும், மனித மாண்போடும் வாழ போர் நிறுத்தம் செய்து அரசியல் ரீதியான தீர்வு கண்டால் மட்டும் போதாது. தமிழர்களுக்கு தனிப்பட்ட இடம் கொடுக்க வேண்டும்.

தனி ஈழம் அமைந்தால்தான் தமிழர்களை காப்பாற்ற முடியும்.

மிகச்சிறிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்காக ஒரு சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்துள்ளது. இதனால் இலங்கையில் மக்களின் தனித்தன்மை, தேவைக்கு ஏற்ப தமிழீழம் கொடுக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் சீராக கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.

Tuesday, January 27, 2009

சுற்றுலா

பொதுவாகவே சுற்றுலா என்றவுடன் மனம் தன்னாலே துள்ளிகுதிக்க ஆரம்பித்துவிடும். ஏனெனில் சுற்றுலா மனதிற்கு ஒரு மலர்ச்சியும் புதிய எண்ணங்களையும் தரக்கூடிய ஒன்று. அரசாட்சிக் காலத்திலும் சரி, முடியாட்சிக் காலத்திலும் சரி ஆட்சியாளர்களும், ஏன் அடித்தட்டு மக்களும் தங்களை புதிப்பித்துக்கொள்ள பயணங்கள் ஒரு இனிய வாய்ப்பாகவே அமைந்து வந்திருக்கிறது. திரை கடல் ஓடி திரவியம் தேடு என்பது தமிழ் மூதாட்டியின் சிறப்பானதொரு அறிவுரை. திரை கடல் ஓடாவிட்டாலும், புதியதொரு சுற்றுச்சூழல், பழக்கவழக்கங்களை உரிய மற்றுமொரு இடத்திற்கு செல்வது கூட புதிய அனுபவத்தை தரக்கூடிய ஒன்று.

அப்படிப்பட்ட சுற்றுலாவிற்கு குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினராகிய நாங்களும் சென்று வந்துள்ளோம். ஆம் தமிழ் மண்ணின் மலர்ச்சிமிகு பசுமை பூமியான கொடைக்கானலுக்கு சென்றோம். பசுமையின் அழகினை இரசித்த அதே வேளையில் இறைவனின் அருளையும் பெற தவறவில்லை. மதிய வேளையில், நீண்ட நாட்களாக நிலவி வந்த பணிமூட்டமிகு சூழல் திங்கட்கிழமையான இன்று இல்லாமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி திருப்பலியில் அனைவரும் பங்கு கொண்டோம். திருப்பலி நிறைவேறிய பின்னர், முன் தினம் இளையோரே சமைத்த சுவைமிகு உணவை உண்டோம்.


மாலை ஆறு மணியளவில், அனைவரும் ஊருக்கு திரும்ப ஆயாத்தமாகிய தருணத்தில் அதுவரை வெளி வராத பனி மூட்டம் வந்தது, எங்களை வாழ்த்தி வழி அனுப்புவதாக அமைந்தது.


படங்கள்:

Thursday, January 15, 2009

பசுமைப் புரட்சி

காலம் மாறுகிறது, மனிதனின் நல்ல குணங்களும் தேய்ந்து வருகின்றது. இயற்கையை அளவுக்கு மீறி அழித்ததின் விளைவை இன்று "மாசுபட்ட காற்று, வறண்ட நிலம் மற்றும் நீரில்லா நீர் நிலைகள்" என சந்தித்து வருகின்றோம். ஏதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் குளம் வெட்டி நீர் தேக்கினர், வாய்க்கால்கள் வெட்டி நீர் பாய்ச்சினர் மற்றும் பயணிகளுக்காக பொது நல நோக்கத்தோடு மரம் பல நட்டனர். ஆனால் நாம் இன்று சாளரம், கதவு என தனது தேவைகளுக்காக அழித்து வருகின்றோமே தவிர பெரும்பாலும் மரங்களையும் இயற்கையையும் பேணி காக்க முன் வருவதில்லை.

அத்தகையதொரு குறையை நீக்க புதிய புதிய சமூக அக்கறையுள்ள திட்டங்களை தீட்டி சிறப்பாக செயலாற்றி வரும் குழந்தை யேசு இளையோர் இயக்கத்தினர் புயலென புறப்பட்டு தமிழ்ப்புத்தாண்டில் அருமையானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். தீர்மானத்தின் சாராம்சம் இதோ

  • முதற்கட்டமாக மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி ஆலயத்தில் இருப்பு வைப்பது.
  • யாரேனும் தங்கள் தெருக்களில் நடவேண்டும் என கேட்டால் இலவசமாக வழங்குவது.
  • தங்களால் நட இயலவில்லையெனில் இளையோர் இயக்கத்தினரே மரம்நடுவதில் உதவி செய்வது.
இயற்கையை பேணி காப்பதில் அக்கறை கொண்ட பங்கு மக்களில் சிலர் இளையோர் இயக்கத்தினரை தொடர்புகொண்டு மரக்கன்றுகளை பெற்று சென்றுள்ளனர். அது தவிர சாந்தி நகர் 22 வது தெருவில் அரசாங்கத்தால் வைக்கப்பட்டு காய்ந்து போன மரக்கன்று ஒன்று காணப்பட்டு அதிலே நமது மரக்கன்றை வைத்து பாதுகாப்போம் என தீர்மானிக்கப்பட்டது. இளையோர் இயக்கத்தினரால் புதிய மரக்கன்று ஒன்று இன்று நடப்பட்டது. இளையோரின் செயல்பாட்டை ஆதரித்து உற்சாகப்படுத்தும் வண்ணம் வான் மழை தூரி வாழ்த்து தெரிவித்தது இளையோருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை யேசுவின் அருளாசீரோடு நிச்சயம் மேலும் பல சாதனைகள் புரிவோம்.

மரம் நடும் இளையோர்:
ஜெரால்ட், லால், அலெக்சாண்டர், ஜோயல், இக்னேசியஸ் & ராஜதுரை

Wednesday, January 14, 2009

பெருநாள்

தமிழர் புத்தாண்டாம் தை முதல் நாளில் குழந்தை யேசுவின் திருநாளும் அமைந்தது சாந்தி நகர் பங்கு மக்கள் செய்த பாக்கியமே. வீரமாமுனிவர் முதல் பல கிறீத்தவர்கள் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களே. அவர் இயற்றிய தேம்பாவாணி பெயரை சார்ந்திருக்கும் தோட்டத்தின் அருகே இருக்கும் நமக்குள் தமிழ் பற்று இருப்பதில் வியப்பேதுமில்லை.

இத்தகையதொரு நாளில் ஆயர் ஜூட் பால்ராஜ் ஆண்டகை தலைமையில் நடந்த பெருவிழாவில் ஏறத்தாழ 4000 க்கும் மேற்ப்பட்டோர் அற்புத குழந்தை யேசுவின் அருளை பெற்றுச்சென்றனர். ஆயர் அவர்கள் பிரசங்கம் வைத்தாலே நாம் அறியாத பல விசயங்களை அறியச்செய்யும் வகையில் எடுத்துரைப்பார். அந்த வகையில் புது நன்மை வாங்கும் குழந்தைகளும் இறைவனின் அருட்கொடைகளைப்பற்றி அறியும் வண்ணம் கேள்விகள் கேட்டு விளக்கம் அளித்தது நிச்சயம் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திருநாள் திருப்பலி நிறைவேறியதும் இளையோர் இயக்கத்தினர் பங்கு தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் அடிகளாருடன் புகைப்படம் எடுத்துகொண்டோம்.

மாலையில் இறை ஆசீருடன் கொடியிரக்கமும், அதனைத்தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா நமது திருநேல்வேலி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு. தனுஸ்கோடி ஆதித்தன் அவர்கள் தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்புரையாற்றிய முனைவர் திரு. வளனரசு அவர்கள் தமிழ் மழையில் அனைவரையும் நனைய வைத்தார்கள். குறிப்பாக "சங்கின் வகைகள் பற்றியும் அதனை தேம்பாவணியில் வீரமாமுனிவர் அன்னை மரியாளைப்பற்றி எடுத்துரைப்பதற்காக எங்ஙனம் பயன்படுத்தியிருக்கிறார்" எனவும் எடுத்துரைத்தது விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.

திருநாட்களில் உற்சாகமாக செயலாற்றிய இளையோரை அனைவரும் ஊக்கப்படுத்த தவறவில்லை. வரும் ஆண்டு திருநாட்களில் எதை எதை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் ஏன இளையோர் இயக்கத்தினர் அனைவரும் கூடி இப்போதே திட்டங்கள் தீட்டியது நிச்சயம் மாற்றத்திற்கான அறிகுறி என்றுதான் சொல்லவேண்டும்.

படம்:

பங்குத்தந்தையுடன் இளையோர் இயக்கத்தினர்.
.

Tuesday, January 13, 2009

தேரில் வரும் தெய்வம்

அற்புத குழந்தை யேசு திருத்தலத்தின் ஒன்பதாவது திருநாளாகிய இன்று திருப்பலி நிறைவேறிய உடன் சப்பரப்பவனி நடைபெற்றது. இளையோர் இயக்கத்தின் சிறப்பான வழி நடத்துதலில் குறிப்பிட்ட நேரத்தில் சப்பரம் ஆலயத்தில் இருந்து சாந்திநகரின் தெருக்கள் வழியாக அருளாசீரை பொழிந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இந்த அருமையானதொரு நாளில் குழந்தை யேசு இளையோர் இயக்கத்தினரும் மற்றும் பலரும், தற்போதைய சூழலில் மோட்டார் வாகனத்தில்(Open type Jeep) பவனியாக கொண்டு செல்லப்படும் குழந்தை யேசுவின் திருவுருவம் தோள்களில் கொண்டு செல்லப்படுமாறு மாற்றியமைக்க வேண்டும் என தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். நிச்சயம் இது நல்ல நோக்கம் தான், ஏனெனில் இறைவனை நம் தோள்களில் தூக்கிச்செல்லும் போது பக்தி இன்னும் அதிகரிக்கின்றது.

படங்கள் :
குழந்தை யேசுவின் திருவுருவம் & திருவுருவப்பவனியின் போது


Sunday, January 11, 2009

உடல் பலமும் மன மகிழ்வும் இறைவார்த்தையில் நிலைக்க!

போட்டிகள்:
இறைய தினம் நமது நமது அற்புதர் குழந்தை இயேசுவின் ஆலய வளாகத்தில் காலை முதல் மாலை வரை சிறுவருக்கான போட்டிகளில் ஆரம்பித்து முதியவர்களுக்கான போட்டிகள் வரை அனைத்துவிதமான போட்டிகளும் நடைபெற்றது. குறிப்பாக சிறுவர்களுக்கான சாக்கு ஓட்டம், செங்கல் மேல் ஓட்டம், நீளம் தாண்டுதல், மிதிவண்டி மேது ஓட்டம் , பெண்களுக்கான ஊசியில் நூல் கோர்த்தல், மெழுகு திரி ஏற்றுதல், இளைஞர்களுக்கான மட்டைப்பந்து போட்டி மற்றும் இளைஞர்கள், திருமணமான ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி ஆகியவை இனிதே நடைபெற்றன.

திருப்பலி:
மறை மாவட்ட போருல்லாளர் தந்தை அவர்களின் தலைமையில் திருப்பலியும் தந்தை ஸ்டாலின் அடிகளாரின் கருத்தாழமிக்க மறையுரையான "தீக்குச்சி மற்றும் மெழுகுவர்த்தி போல் தன்னலம் கருதாத பிறர் நலம் கொண்ட வாழ்க்கை வாழ குழந்தை இயேசு நம்மை அழைக்கிறார்" நிச்சயம் மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கலை
நிகழ்ச்சிகள்:
விழாக்களும் போட்டிகளும் பங்குமக்கள் தங்களின் பங்களிப்பையும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு சமூக வாழ்க்கைக்கு இவையும் இன்றியமையாதது என்ற குறிக்கோளுடன்தான் ஏற்படுத்தப்படிருக்கிறது. அந்த வகையில் திருப்பலிக்குப்பின் நமது மறைமாவட்ட கலைக் குழுவினரான பொருநை கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

படங்கள் :
செங்கல் மேல் ஓட்டம் & வெற்றிபெற்ற மட்டைபந்து அணியினர்

Saturday, January 10, 2009

திருநாளில் ஒரு(6) நாள்

சாந்தி நகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் ஆறாவது நாளான இன்று, பக்தர்கள் குழந்தை இயேசுவின் அருளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு சென்ற அதே வேளையில் இளைஞர்கள் மகிழ்ச்சியோடும், முகமலர்ச்சியோடும் சென்றனர். காரணம் இன்று நடந்த போட்டிதான். திருநாளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டிகள் நடந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பங்குகொள்ளும் வகையில் இந்த போட்டிகள் உள்ளன.

அந்த வகையில் இன்று இளைஞர்களுக்கும், திருமணமான ஆண்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இளைஞர்கள் செல்வன் அலெக்சாண்டர் தலைமையில் கலந்துகொண்டனர். பங்கு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டிகளுள் கயிறு இழுக்கும் போட்டியும் ஒன்று. அனைவரின் எதிப்பார்ப்புக்கிடையே இளைஞர்கள் இரு வாய்ப்புகளிலும் வென்று பரிசை தட்டிச்சென்றனர்.

Monday, January 5, 2009

ஏற்றம்!

நமது சாந்திநகர் குழந்தை இயேசு ஆலயத்தில் திருவிழா தொடங்கியதன் அடையாளமாக இன்று இனிதே கொடியேற்றப்பட்டது. நமது மறைமாவட்டத்தின் முதன்மை குரு தலைமை தாங்க, தந்தையர்கள் பலர் வந்து வாழ்த்த, பங்கு மக்களின் மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரத்தோடு அற்ப்புத குழந்தை இயேசுவின் கொடி ஏற்றப்பட்டது.

"கொடியைப்போல் மக்கள் மனமும் இறைவனை நோக்கி உயர வேண்டும்" என்ற சரியானதொரு கருத்துடன், தமிழர் தம் பண்பாட்டின்படி திருவிழாவின் முதல் நாலான இன்று திருப்பலியில் குத்து விளக்கு ஏற்றப்பட்டது. ஒவ்வொரு பக்த சபையின் சார்பாகவும் ஒருவர் வந்து விளக்கேற்றினார். இளைஞர் இயக்கத்தின் சார்பாக செல்வன் மேரி லால் விளக்கில் ஒளி ஏற்றினார். குழந்தை இயேசு வழிபாடு தொடங்கப்பட்ட கால வரலாற்றையும், வாழ்விற்கு தேவையானதொரு மறையுரையுடன் திருப்பலி இனிதே நிறைவு பெற்றது.

Friday, January 2, 2009

பரிசுகள்!

நமது சாந்தி நகர் பங்கு மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பரிசு குலுக்கல் இந்த வருடத்தின் முதல் நாள் இனிதே நடைபெற்றது. இளையோர் இயக்கத்தினருக்கு இந்த நாள் ஊக்கம் தரும் நாளாக அமைந்தது. ஏனெனில் போதுமான அளவில் பரிசுச்சீட்டுகள் விநியோகித்து இருந்தாலும், பலரும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அடுத்த ஆண்டுக்கான பரிசு குலுக்கலுக்கு நிச்சயம் அதிக அளவில் பரிசுச்சீட்டுக்கள் விநியோகிக்கவேண்டும் என்ற மக்களின் ஆர்வத்துடன் பரிசு குலுக்கல் தொடங்கியது.

பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் அடிகளார் வாழ்த்துரை வழங்க பரிசு குலுக்கல் ஆரம்பமானது. ஒவ்வொரு ஐம்பது பரிசுக்கிடயேயும் ஒவ்வொரு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளையோர் நடத்திய நாடகம் அனைவரின் கவனத்தையும் கருத்தையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக வித்தியாசமான முறையில் நாடகத்துக்கு இடையே வந்த நடனம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. கலந்து கொள்ளும் பங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் இளைஞர் இயக்கத்தின் சிறப்பான செயல்பாடுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையும், ஆர்வமும் அதிகரித்து வருவது நமது பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Thursday, January 1, 2009

பிறந்தது புத்தாண்டு!

துன்பங்களும், துயரங்களும் அதனோடுகூட இன்பங்களும் சந்தித்த 2008 முடிந்து மாபெரும் எதிர்பார்ப்புடன் பிறந்திருக்கிறது புத்தாண்டு!

இப்புத்தாண்டின் எதிர்பார்ப்பென்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான எதிர்ப்பார்ப்பிருக்கும். அந்த எதிர்ப்பார்ப்பு நமக்கு மட்டும் நல்லதானதா? அல்லது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதா?! என்பதனை சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாண்டில் எல்லோரும் எதிர் நோக்குவது என்னவென்று பார்த்தால், இவ்வாண்டின் மத்தியில் அடுத்து ஆளப்போகி நடுவண் அரசை தேர்ந்தெடுக்கப்போகின்றோம், மிகுந்த வருத்தத்தோடு & என்னதான் நடக்கிறது என்ற குழப்பத்தோடு எதிர்ப்பார்க்கும் இலங்கை வாழ் தமிழர்களின் நிலை மகிழ்ச்சிக்குரியதாக மாற வேண்டும் போன்ற பெரிய பொதுவான நோக்கங்களோடு,

பருவம் தவறா நல்ல மழை, நோய் நொடியில்லா சூழல், கோபமில்லா மனப்பக்குவம், வேற்றுமையிலும் ஒற்றுமை, ஆயுதம் ஏந்தாத உள்ளம், இறை பக்தியோடு கூடிய செயல்பாடுகள் யாவும் பெற குழந்தை இயேசு துணை வேண்டுவோம்.

இப்புத்தாண்டில் உறுதிமொழிகளோடு அல்ல;
உறுதியான சிறந்த செயல்பாடுகளின் வழி நடப்போம்!